என் ராசாவின் மனசிலே-2 விரைவில்..! மகன் இயக்கத்தில் ராஜ்கிரண்?

திரைத்துறைக்கு அறிமுகமாக இருக்கும் ராஜ்கிரண் மகன்..!

என் ராசாவின் மனசிலே-2 விரைவில்..! மகன் இயக்கத்தில் ராஜ்கிரண்?

என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறாராம் நடிகர் ராஜ்கிரண். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் முதல் படமான ராசாவின் மனசிலே திரைப்படம் 1991-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவர் படத்தின் நாயகனான ராஜ்கிரண். தொடை தெரிய கைலியை கட்டிக் கொண்டு ஆட்டுக்காலை கடித்து இழுக்கும் காட்சிகள் ராஜ்கிரணுக்கு தனி அடையாளத்தை கொடுத்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது. இன்றளவும் 90ஸ்-களின் எவர் கிரீன் பாடல்களில் ராசாவின் மனசிலே படப் பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். 

இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், இதனை ராஜ்கிரணின் மகனான திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். தற்போது ராஜ்கிரண் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.