10 ஆயிரம் மின்சார பேருந்துகள்; மத்திய அரசு ஒப்புதல்!

10 ஆயிரம் மின்சார பேருந்துகள்; மத்திய அரசு ஒப்புதல்!

நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் மதிப்பில், நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், தனியாருடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்தார். குறிப்பாக, 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேபோல், கைவினை பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதம அமைச்சரின் விஸ்வர்மா திட்டத்தின்கீழ்,  கைவினை கலைஞர்களுக்கு 5 சதவிகித வட்டியில் 1 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:"எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் சிறுத்தைகளின் களத்தை வெல்ல முடியாது" திருமா அறைகூவல்!