200 யூனிட் இலவச மின்சாரம் ; சித்தராமையா தொடங்கி வைத்தார்...!
200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் க்ருஹ ஜோதி திட்டத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது, காங்கிரஸும் பாஜகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தனித்தனியே பல்வேறு பரப்புரைகளை அள்ளி வீசினர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.
அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து தங்களின் கட்சி சார்பாக மக்களைக் கவரும் வகையில் முக்கிய வாக்குறுதிகளை கொடுத்திருந்தனர்.
அந்தவைகையில், காங்கிரஸ் சார்பில் மங்களூருவில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டபோது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற சலுகையை அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவித்திருந்த நிலையில்,
அதில் ஒரு திட்டமான அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்தது.
அதன்படி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை, கலபுர்கி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்விளக்கு பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | NIA அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு!