இறைச்சியில் விஷம் வைத்து தெரு நாய்களை கொன்ற கொடூரம்...

புதுச்சேரியில் இறைச்சியில் விஷம் வைத்து 7 தெரு நாய்களை கொன்ற சம்பவம், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறைச்சியில் விஷம் வைத்து தெரு நாய்களை கொன்ற கொடூரம்...

புதுச்சேரியில் இறைச்சியில் விஷம் வைத்து 7 தெரு நாய்களை கொன்ற சம்பவம், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் பகுதியில் உள்ள சுதந்திர பொன் விழா நகரில், பல அடுக்குமாடி குடியிருப்புகள் தனியாக அமைந்துள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வலம் வரும் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்துக் கொண்டும் இருந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், நாய்களுக்கு உடனடியாக தண்ணீர் மற்றும் மருந்து கொடுத்துள்ளனர். ஆனாலும், 7 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன‌.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குடியிருப்பு அருகில் வசிக்கும் சிலர் நாய்களை கொல்லும் நோக்கிலேயே, கோழிக்கறியில் செடிகளுக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகளை வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள நாய்கள் வெளியாட்களை விடாததாலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நாய்கள் இருந்துள்ளதாலும், கல்மனம் கொண்ட சிலர் இதனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடூர மனம் படைத்த சிலரால் வாயில்லா விலங்குகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.