காதல் திருமணம் செய்து கொண்ட மருத்துவ மாணவி...! அடியாட்களுடன் அடித்து இழுத்து சென்ற பெற்றோர்...!

காதல் திருமணம் செய்து கொண்ட மருத்துவ மாணவி...! அடியாட்களுடன் அடித்து இழுத்து சென்ற பெற்றோர்...!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சீனிவாஸ் - ஜான்சி தம்பதியின் மகள் சுஷ்மா. திருப்பதியில் உள்ள கல்லூரியில் சுஷ்மா எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். சித்தூர் மாவட்டம் புஜ்ஜி நாயுடு கண்டிகை பகுதியை சேர்ந்த மோகன கிருஷ்ணா, திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சுஷ்மா, மோகன கிருஷ்ணா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. பின்னர் தங்களுடைய காதலை பற்றி இரு வீட்டாரிடமும்  தெரிவித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினர். ஆனால் சுஷ்மா குடும்பத்தினர் இரண்டு பேரும் வேறு பிரிவை சேர்ந்தவர்கள்  என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சுஷ்மா குடும்பம் பொருளாதார ரீதியில் மேலோங்கி உள்ளதாலும்   சுஷ்மாவின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இரண்டு பேரும் திருப்பதி,  சந்திரகிரியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து தன்னுடைய மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்தார்  சுஷ்மாவின் தாய் ஜான்சி.

இந்நிலையில் அக்டோபர் மாதம்  7 - ஆம் தேதி அடியாட்களுடன் புஜ்ஜி நாயுடு கண்டிகைக்கு வந்த சுஷ்மாவின் பெற்றோர் நள்ளிரவு நேரத்தில் மோகன கிருஷ்ணா வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சுவரை உடைத்து சுஷ்மாவை அடித்து இழுத்து சென்றனர். அப்போது மோகன கிருஷ்ணா மற்றும் அவருடைய பெற்றோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும், குண்டூரில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சுஷ்மா அங்கிருந்து தப்பித்து நேற்று திருப்பதிக்கு வந்து சேர்ந்தார். வரும் வழியில் மோகன கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட சுஷ்மா, எஸ்.பி அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து திருப்பதி எஸ் பி யிடம் சுஷ்மா நடந்த சம்பவங்களை கூறி பெற்றோர் மூலம் தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக சந்திரகிரி காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்த திருப்பதி எஸ் பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், சுஷ்மா, மோகன கிருஷ்ணா ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் சந்திரகிரி காவல் துறையினர் சுஷ்மாவின் பெற்றோர் மற்றும் அடியாட்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.