பிரதமர் மோடி பெயரை களங்கப்படுத்திய யூ-டியூப்: நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்  

இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வலியுறுத்தி பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

பிரதமர் மோடி பெயரை களங்கப்படுத்திய யூ-டியூப்: நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்   

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் பா.ஜ.க வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை அவதூறாக சித்தரித்து மார்ஃப் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பரப்பும் யூ-டியூப் நிறுவனம் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால் கனகராஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பின்னால் இருந்து கட்டியணைப்பதுபோல் ஒரு புகைப்படத்தை கடந்த 6 ஆம் தேதி Modern Times என்ற யூ-டியூப் நிறுவனம் வெளியிட்டு வைரலாக்கியுள்ளதாக தெரிவித்தார். இச்செயல் அவர்களின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களின் பின்னால் இருக்கும் யாருடைய தூண்டலின் பேரில் செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது எனவும் அவர் கூறினார். மேலும், அவர்கள் வெளியிட்ட அந்த புகைப்படத்தின் கீழ் பா.ஜ.க உருவாக்கிய "பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்" திட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாகவும், பா.ஜ.க தலைவர்களை கற்பழிப்பாளர்கள் என குறிப்பிட்டும் வகையிலும் பல்வேறு கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க-வின் சிறப்பான ஆட்சியை குலைக்கும் வகையிலும், மக்கள் மனதில் பா.ஜ.க குறித்தும், பா.ஜ.க-வின் தலைவர்கள் குறித்தும் தவறான எண்ணத்தை விதைக்கும் வகையிலும் இச்செயல்பாடு உள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய பிரதமரையும், மத்திய அமைச்சரையும் இவ்வாறு தவறாக சித்தரித்த யூ-டியூப் நிறுவனம் மீது குற்றவியல் நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், Modern Times என்ற அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கபப்டும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.