இலவசங்களுக்கு தடையா...??மக்களின் நிலைப்பாடு என்ன??

இலவசங்களுக்கு தடையா...??மக்களின் நிலைப்பாடு என்ன??

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் பிரச்சனை இருப்பதை யாரும் மறுக்க முடியாது எனவும் இந்த விவகாரம் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் தலையிட முடியாது என கூற முடியுமா எனவும் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் உதாரணமாக ஏதாவது சட்டம் இயற்றப்படும்போது அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா எனவும் எனவே தான் இந்த தேர்தல் இலவசங்கள் விவகாரம் தொடர்பாக இங்கு விவாதிப்போம் எனவும் அது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்போம் பின்னர் முடிவு செய்யலாம் என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

பொருளாதார நிலை:

இந்த விவகாரத்தில் பொருளாதார நிலை தொடர்பாக முதலில் நாம் விவாதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்திருந்தார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்க முடியும் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநிலத்தின் கடன் தொகையே அதிகரிக்கிறது, இது மாநில வளர்ச்சியை பாதிக்கிறது என மூத்த வழக்கறிஞர் விகாஸ் விவாதம் எழுப்பினார்.  மேலும் இந்த இலவசங்கள் என்பது ஊழலுக்கு வழி வகுக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.  இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி தேர்தல் இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று தான் எனவும் பா.ஜ.க, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரும் இலவசம் வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர்களின் கருத்து:

தேர்தல் நேர இலவசம் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து கொள்ளும் என தெரிவித்தால், அது தொடர்பாக சில உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் இலவசங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கருத்து இருக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.  மேலும் இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.  குறிப்பாக தேர்தல் இலவச வாக்குறுதிகள் இவ்வாறு தொடர்ந்தால் அது மாநிலத்தின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும், பாதளத்துக்கு எடுத்து செல்லும் எனவும் மேலும் கூறியுள்ளார்.

மக்கள் மீது விழும் சுமை:

இந்த இலவசம் விவகாரத்தில் பல வேறு category உள்ளது.  குறிப்பாக ஒரு கட்சி சேலை தருவதாக அறிவிக்கிறது,  இலவச மின்சாரம் அறிவிக்கிறது.  இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு  வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது.  எனவே தான் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சனையாக மட்டுமே கருதுகிறார்கள்.  மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு  கால்நடை வழங்குவது அவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றவே எனவும் அதேபோல கிராமப்புற மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவது அவர்கள் கல்வி கற்று பயனடையவே எனவும் நீதிபதி ரமணா கூறியுள்ளார். எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என கூறவில்லை, இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

ஆனால் தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது எனவும் அது கவனிக்கப்பட வேண்டியதும், சரிபடுத்தப்பட வேண்டியதும் ஆகும் எனவும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  இலவச திட்டங்களை கண்டு அஞ்சுகிறதா பாஜக...?