கரையை கடந்த பிபார்ஜாய் புயல்...! கலையிழந்த மாநிலங்கள்..!
தென்கிழக்கு அரபிக்கடலில் வலுப்பெற்ற பிபார்ஜாய் புயல் நேற்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இந்த புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது.
முன்னதாக குஜராத்தின் கரையோர பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் பேய்மழை கொட்டியது. மேலும் புயல் கரையை கடக்க தொடங்கியபோது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கட்ச், தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களும் சாய்ந்த நிலையில் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் கடல் நீர் கரையோர கிராமங்களுக்குள் புகுந்த நிலையில் மாநிலத்தில் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார், தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதைப்போல முப்படைகள் மற்றும் கடலோர காவல்படை என பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் முழுவீச்சில் களமிறக்கப்பட்டன. முன்னதாக புயல் கடந்து செல்லும் பகுதிகளிலிருந்து 94 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் இந்த புயல் காரணமாக இதுவரை 22 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன என்றும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை மற்றும் பலத்த காற்றுடன் குஜராத்தில் பல்வேறு இடங்களில் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பதிலளிக்காத ஆளுநருக்கு, பதிலளிக்க சொல்லி உத்தரவு
இந்நிலையில், பிபோர்ஜாய் புயல் தாக்கம் காரணமாக குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் குஜராத்தின் சவுராஷ்டிரா – கட்சி இடையே அதிதீவிர புயலாக கரையை கடந்தது. சுமார் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏராளமான கிராமங்கள் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தை தொடர்ந்து, பிபோர்ஜாய் புயல் சுழன்றடித்ததால் ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் களையிழந்து காணப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல், சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் கட்டிடங்களில் இருந்த கண்ணாடி கதவுகள் கீழே விழுந்து உடைந்தன. மேலும், மின் கம்பங்கள் மற்றும் வளைவுகள் சரிந்து விழுந்ததால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதையும் படிக்க | ”முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலுக்கான அவசியமே இல்லை” கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!