பல்கலைக்கழக ஆடிட்டோரிய கட்டிடத்திற்கு ஜப்தி நோட்டீஸ்..!

கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய  நிலுவைத் தொகை வழங்காததால், புதுச்சேரி பல்கலைக்கழக ஆடிட்டோரிய கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவு படி ஜப்தி செய்யப்படுவதாக நோட்டீஸ்,..  

புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக இரண்டாவது நுழைவு வாயில் அருகே ரூ.6 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆடிட்டோரியம் கட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆடிட்டோரியம் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில்,  நிலுவைத் தொகை ரூ. 4.19 லட்சம் கட்டுமான நிறுவனத்திற்கு பல்கலைக்கழகம் தரவில்லை. அதனால் கட்டுமான நிறுவனம் புதுச்சேரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், நிலுவை தொகையை வழங்க உத்தரவிட்டது.

அதன்பிறகும் பல்கலைக்கழக தொகையை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து,  கட்டுமான நிறுவனம் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்ற நீதிமன்றம், புதிய ஆடிட்டோரிய கட்டடத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இன்னிலையில், நீதிமன்ற ஊழியர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று புதிய ஆடிட்டோரிய கட்டடத்தை ஜப்தி செய்து, அதற்கான நோட்டீசை ஒட்டினர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு முன்பு இதே காரணத்திற்காக சில நாட்களுக்கு முன்பு பல்கலைக் கழக  பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   |  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பு.!