இன்று மாலை கரையை கடக்கிறது 'பிபார்ஜாய்’ புயல்!

இன்று மாலை கரையை கடக்கிறது 'பிபார்ஜாய்’ புயல்!

அரபிக் கடலில் உருவான ‘பிபார்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அரு கே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

பிபார்ஜாய் புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா-கட்ச் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் குஜராத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. மேலும் இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மின கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். 

இதனிடையே பாதுகாப்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினர் அடங்கிய குழுக்கள்  உட்பட மாநில மின்சாரத் துறையின் 397 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன. கள நிலவரம் தொடா்பாக, மாநில தலைமைச் செயலா் மற்றும் மாநில அவசரகால நடவடிக்கை மையத்தின் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆலோசனை மேற்கொண்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா். 

முன்னதாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கட்ச் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் விமானப் படை தளத்துக்கு வருகை தந்த அவா், விமானப் படையின் ‘கருடா’ அவசரகால நடவடிக்கை குழுவின் தயாா் நிலையை பாா்வையிட்டாா். புஜ் பகுதியில் உள்ள கே. கே.படேல் பன்நோக்கு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவா் நேரில் ஆய்வு செய்தாா்.

மேலும் ‘பிபா்ஜாய்’ புயலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினாா். மேலும், முப்படைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக, ட்விட்டரில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ‘பிபா்ஜாய் புயலை எதிா்கொள்வது தொடா்பாக முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. புயலின் பாதிப்புகளை எதிா்கொள்வதில் உள்ளூா் நிா்வாகங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய முப்படைகளும் தயாராக உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதையும் படிக்க:அத்தியாவசிய தேவைக்காக ஆபத்தான பயணம்!