’டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா’ மக்களவையில் நிறைவேற்றம்..!
எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களவையில் சில மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள் காலை மக்களவை தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மக்களவை கூடிய நிலையில், எதிர் கட்சிகளின் அமளிக்கிடையே டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து, சைபர் கிரைம் வழக்கறிஞரிடம் கேட்டபோது, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நிறுவனங்களுக்கு தனி நபர் வழங்கும் டிஜிட்டல் தரவுகள் பாதுகாக்கப்படும் என்றும், அவ்வாறு பாதுகாக்கப்படவில்லை என்றால், 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிக்க | இந்தியை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள அது என்ன குழந்தையின் முத்தமா? - கவிஞர் வைரமுத்து.