மான்களை வேட்டையாடிய நபர்கள் மீது வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டால் பரபரப்பு...

கர்நாடக வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நபர்கள் மீது வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டால் பரபரப்பு ஏற்பட்டது. 

மான்களை வேட்டையாடிய நபர்கள் மீது வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டால் பரபரப்பு...

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஹல்கூர்  வனப்பகுதியில் நேற்று மர்ம நபர்கள் 4 பேர் உள்ளே நுழைந்து நாட்டு துப்பாக்கிகளை கொண்டு மான்களை வேட்டையாடினர். வனப்பகுதியில் துப்பாக்கி சத்தத்தை கேட்ட வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 4 நபர்கள் துப்பாக்கிகளை ஏந்தியவாறு இரண்டு இறந்த மான்களை தூக்கிச் சென்று கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே அவர்களிடம் இருந்த துப்பாக்கியை கீழே போட்டு விட்டு சரண் அடைய வனத்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் மர்ம நபர்கள் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். 

உடனடியாக வனத்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தவே ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலத்த காயத்துடன் சரிந்து விழுந்தார். மீதமுள்ள மூன்று நபர்கள் வனப்பகுதிக்குள் தப்பித்து சென்று விட்டனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த வெங்கடேஷ் என்பவரை கைது செய்த வனத்துறையினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மீதமுள்ள மூன்று நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரும், வனத்துறையினரும் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் இறந்த இரண்டு மான்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.