கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10 ஆம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும் பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள். வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 

வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந்தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.