தடுப்பூசி செலுத்தும் இலக்கை இந்தியா தவறவிட்டதா? : மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
இந்தியாவில் 3 மாநிலங்கள் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் குறைந்த அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சமீபத்தில் பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்த தகவல் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், 65 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 11 மாநிலங்களில் 100 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, 3 மாநிலங்கள் 100 சதவீதம் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாகவும், பிற மாநிலங்களும் விரைவில் 100 சதவீத இலக்கை அடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.