ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுடன் திறப்பு... 5 நாட்களுக்கு பக்தர்கள் வர அனுமதி...

கோவிட் பொதுமுடக்கத்தால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுடன் திறப்பு... 5 நாட்களுக்கு பக்தர்கள் வர அனுமதி...

சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் வெளியிட்ட செய்தியில், கேரளாவில் கோவிட் பெருந்தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி நேற்று மாலை சந்நிதானம் நடை திறக்கப்பட்டது.

இன்று முதல் வரும் 21ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன், ஆர்டிபிசிஆர் கோவிட் தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேணடும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.