பயிர்களைத் தாக்கும் மர்ம ”குள்ளநோய்”...
இந்தியாவின் பசுமைப் புரட்சி பயிர்களில் வளர்ச்சி குன்றியதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பருவ மழை பற்றாக்குறை காரணமாக உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்களில் குள்ளநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது.
ஆரம்பத்தில் துத்தநாகம் குறைபாடு காரணமாக இந்நோய் ஏற்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நிலத்தின் விவசாயிகள் துத்தநாகம் கலந்த தண்ணீரைத் தெளித்துள்ளனர். ஆனால் பயிர்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல மாவட்டங்களில் குள்ளத்தனமான நெல்கள் வளர்ந்துள்ளதாக விவசாய இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். நேரடியாக நெல் விதைக்கப்பட்ட நிலங்களில் இப்பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நோய் குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.