ஆபரேசன் அஜய்: இஸ்ரேல் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய 212 இந்தியர்கள்!!

இஸ்ரேல் நாட்டிலிருந்து முதல்கட்டமாக 212 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதப் படையினருக்கும் கடந்த 7 ஆம் தேதி முதல் கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டிலுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு ஆபரேசன் அஜய் என்ற திட்டத்தை தொடங்கியது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு அங்குள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியர்களை அழைத்து வர இஸ்ரேல் நாட்டுக்கு  சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 212 இந்தியர்கள்  முதல்கட்டமாக  தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

டெல்லி விமான நிலையம் வந்த அவர்களை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.

முன்னதாக செய்தியாளரிடம் பேசிய் ராஜீவ் சந்திரசேகர் பிரதமர் மோடி அரசாங்கம் எந்தவொரு இந்தியரையும் ஒரு போதும் விட்டுவிடாது என்று கூறினார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் விமானக் குழுவினருக்கு நாடு கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.