குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக சார்பில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பை ஜே.பி.நட்டா மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, பாஜக சார்பில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பை ஜே.பி.நட்டா மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் அக்கட்சி ஒப்படைத்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக சார்பில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பை ஜே.பி.நட்டா மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் ஜூன் 15 முதல் ஜூன் 29 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஜூலை 18ஆம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கேவை அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.  

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகளுடன் இணைந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் அந்த கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.