ஓராண்டுக்கு பின் பள்ளிகள் திறப்பு... இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகள்...

தொற்று பரவல் குறைவாக உள்ள மாநிலங்கள் இன்று முதல் மீண்டும் பள்ளிகளை திறந்துள்ளன.

ஓராண்டுக்கு பின் பள்ளிகள் திறப்பு... இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகள்...

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக மட்டும் வகுப்புகள் நடந்து வந்தன. இந்தநிலையில் சிறுவர்களுக்கு தொற்று பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறியதை அடுத்து, மாநிலங்கள் படிப்படியாக பள்ளிகளை திறக்க தொடங்கியுள்ளன.

இதற்கென  பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்துள்ள அவர்கள், அரசு உத்தரவின் பேரில் கொரோனா விதிகளையும் பின்பற்றி வகுப்புகளை முழுவதுமாக சுத்தப்படுத்தியுள்ளனர். அதன்பேரில் பெற்றோர்களின் அறிவுறுத்தலின் கீழ் மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதேபோல் பஞ்சாபில்  ஒன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் ஒரு மேசைக்கு ஒரு மாணவர் வீதம் அமரவும், கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மாணவர்களே தங்களுக்கு சொந்தமாக கிருமி நாசினி மற்றும் சுத்தமான முககவசம் அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி லூதியானாவில் உள்ள ஒரு பள்ளியில்  ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை முதல் மதியம் வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புகளிலும்  50 சதவீதம் மாணவர்களே அனுமதிக்கப்படுவர் என பள்ளிகள் சார்பில் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.