தமிழக அரசு பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளது - சீமான்

தமிழக அரசு பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளது - சீமான்

திமுக பாஜகவோடு போக வாய்ப்புள்ளது, திடீரென சேர்ந்தால் விகாரமாக தெரியும் என்பதால் இப்போதே பாஜகவிடம் சரணடைந்து  வேலை செய்கின்றது என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எந்த தேசிய கட்சிகளும் தேசிய இனங்களின் உரிமைக்கு எதிராகத்தான் இருக்கும். புதுச்சேரி மட்டுமல்ல டெல்லியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தலைநகர் டெல்லியிலே அரவிந்த் கெஜ்ரிவால் சிரமப்படுவதை பார்க்க முடிகின்றது. தேசிய இனங்களின் முன்னுரிமை, தேசிய இனங்களுக்கான உரிமை, தேசிய இனங்களின் இறையாண்மையை பேசுவது எதுவோ அந்த கட்சிதான் இந்திய ஒற்றுமையை நேசிக்கின்றது என்று அர்த்தம் என தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இருக்கும்போதே மாநில அந்த்ஸ்த்து கேட்டிருக்க வேண்டும். காங்கிரசும் கொடுத்து இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னாட்சி உரிமை இருந்தால் தான் இந்தியா என் நாடு என்ற எண்ணம் வரும் என்று பேசிய அவர், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எங்களை வஞ்சித்தால் கோபம் தான் வரும் என கூறியுள்ளார். தமிழ்நாட்டை பொருத்தவரை இந்தியா என் நாடு என்ற எண்ணம் வராததற்கு பல காரணங்கள் உள்ளது. கட்சத்தீவை கொடுத்து விட்டார்கள், அணு உலையை வைக்கிறார்கள், மீத்தேன் எடுக்கப்படுகின்றது காவிரி படுகையில் மீத்தேன் இருக்கின்றது என்கிறார்கள் ஆனால் கங்கை படுகையில் இருக்கும் மீத்தேனை ஏன் எடுப்பதில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் போட்டார். பயனில்லை. ஆனால் வருங்கால தலைமுறைக்கு அழுத்தமான அதிகாரம் வரும்போது இந்த தீர்மானம் வலிமை சேர்க்கும் என்றார்.

கமல், காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அவருக்கு அதன் மீது ஈர்ப்பு இருந்திருக்கும், கமலுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரவும் எண்ணம் இருந்திருக்கலாம் என தெரிவித்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கேட்கும் ரங்கசாமி குறைந்த பட்ச தேவையில் தானே மத்திய பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும். மாநில அந்தஸ்த்து கொடுங்கள், இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்று கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். அதிமுக எடப்பாடி அணி தற்போது பாஜகவை எதிர்க்கின்ற நகர்வுகளை பார்க்க முடிகின்றது. ஆனால் தேர்தலின்போது தான் உறுதியாக சொல்ல முடியும் என சீமான் பேசினார். 

திமுக பாஜகவோடு போக வாய்ப்புள்ளது. திடீரென சேர்ந்தால் விகாரமாக தெரியும் என்பதால் இப்போதே பாஜகவிடம் சரணடைந்து தமிழக அரசு வேலை செய்கிறது என்றும் பாஜக ஆளவேண்டிய அவசியம் இல்லாமல் பாஜக என்ன நினைக்கின்றதோ அதை செயல்படுத்துகின்றது. புதிய கல்வி கொள்கைகொள்கை, இல்லம்தேடி கல்விக்கொள்கை என எல்லா செயல்பாடுகளையும் தமிழக அரசு செய்கின்றது என குற்றஞசாட்டிய சீமான், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட மின் கட்டணத்தை கட்ட ஆதாரோடு இணைக்கவில்லை ஆனால் தமிழகத்தில் அவை செயல்படுத்தப்படுகிறது என்றார். பாஜக சொல்லும் என்று கூட பார்ப்பதில்லாமல் விவசாயிகளுக்கு மானியம் பெறுவதிலும் ஆதாரை இணைக்க சொல்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்கள் கூட இவ்வளவு தீவிரப்படுத்துவதில்லை. ஆனால் தமிழக அரசு பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்கு விசுவாசமான ஆட்சியாக இருக்கின்றது என்றார். இறுதியாக, வாரிசு என்றால் படமாக இருந்தாலும் சரி பதவியாக இருந்தாலும் சரி பிரச்சினை தான் என கூறினார். 

இதையும் படிக்க : என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கொள்ளையடித்த வழக்கு..! 9 பேரை கைது செய்த போலீசார்...!