ஒத்திவைக்கப்பட்ட ரயில்வே தேர்வு எப்போது நடைபெறும்?

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ரயில்வே துறை தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட ரயில்வே தேர்வு எப்போது நடைபெறும்?

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளுக்கு இடையே ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரபல பிரிவுகளில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கான முதல் சுற்று கணினி சார்ந்த தேர்வு ஆறு கட்டங்களாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 8 வரை சுமார் 1.23 கோடி தேர்வர்களுக்கு நடத்தப்பட்டன.

எஞ்சியுள்ள 2.78 லட்சம் தேர்வர்களுக்கான ஏழாவது கட்ட கணினி சார்ந்த தேர்வு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூலை 23, 24, 26 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்வு மையங்களில் 50 சதவீதத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள 76 நகரங்களில் இருக்கும் 260 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என தெவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான தேர்வர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு வேளை அவர்களது சொந்த மாநிலத்தில் மையத்தை ஒதுக்கீடு செய்ய முடியாத பட்சத்தில் அருகில் உள்ள மாநிலத்தில் உள்ள ரயில் வசதியுடன் கூடிய மையம் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.