தென் மண்டல கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன்?

தென் மண்டல கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன்?

தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதலமைச்சர்ர் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுகவின் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

தென்மண்டல கவுன்சில்

தென்னக மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் இடையேயான எல்லையோர பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு விவகாரம், உள்கட்டமைப்பு, மகளிர் பிரச்சினைகள், அணை நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும். இதன் 30ஆவது கூட்டம் செப்டம்பர் 3 அன்று கேரளாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் அட்சிப் பகுதியான புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் துணை நிலை ஆளுநர் கலந்து கொண்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆளுநர் பங்கேற்றதுக்கு அதிமுக விமர்சனம்

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், தென்மண்டல மாநிலங்களுக்கான கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளாமல் துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டது பல்வேறு கேள்வியை எழுப்பி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமையை ஆளுநர் வழங்க வேண்டும் என்று அன்பழகன் கூறினார்.

முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்

இந்தகூட்டத்திற்கு முதலமைச்சர் செல்லாததற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்த அன்பழகன்,ஆளுநரும் முதல்வரை கலந்து கொள்ள வலியுறுத்திருக்க வேண்டும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டுடிருந்தால் மாநில அரசின் உரிமை பறிக்கபடுகிறது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். இக்கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்தும், துணைநிலை  ஆளுநர் கலந்து கொண்டது குறித்தும், ஆளுநர் அந்த கூட்டத்தில் பேசிய விவகாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.