காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்..! அம்ரித்பால் சிங் சரண்..!!
அமிர்தசரஸ் காவல் நிலையத்திற்குள் புகுந்து சூறையாடிய வழக்கில் ஒருமாதம் தலைமறைவாகி இருந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப் போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக கொண்டு சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக செயல்பட்டு வரும் நபர் அம்ரித்பால் சிங். கடந்த மாதம் இவரது ஆதரவாளர்கள் சிலர் ஆள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அம்ரித்பால் சிங் அந்த காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து சூறையாடி தனது ஆதரவாளர்களை வெளியே கொண்டுவந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்பட்டதை தொடர்ந்து அம்ரித்பாலை கைது செய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை மார்ச் 18ஆம் தேதி களமிறங்கியது. ஆனால், அம்ரித்பால் காவல்துறை கையில் சிக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.
ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.