சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வர அனுமதி வழங்கல்

சபரிமலை கோவில் நடை 16-ந் தேதி திறக்கப்படவுள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வர அனுமதி வழங்கல்

கேரளாவில் தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் சபரிமலைக்கு தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16 -ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

 கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.