பட்டாசு வெடித்து சிதறியதில் 10 பேர் காயம்!

மீஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் 5ஆம் வார திருவிழா சனிக்கிழமையான நேற்றிரவு இந்த கோவிலில் நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக ஊரில் உள்ள தெருக்களில் சாமி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது குளக்கரை பகுதியில் வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கப்பட்டது. 

அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு கூடியிருந்த பக்தர்கள், இளைஞர்கள் மீது தீப்பொறி தெரித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக 108அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதால் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: Pay tm - மூலம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்!