நீர் பாசன வாய்க்கால் தூர்வாராததால் காயும் 1000 ஏக்கர் குறுவை பயிர்கள்; விவசாயிகளே தூர்வாரும் அவலம்..!

நீர் பாசன வாய்க்கால் தூர்வாராததால் காயும்  1000 ஏக்கர் குறுவை பயிர்கள்;  விவசாயிகளே தூர்வாரும் அவலம்..!

நாகை அருகே பாசன வாய்க்கால் தூர்வாராததால் காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சென்றடையவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை விவசாயிகளே தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை. இந்நிலையில் காவிரி நீரை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கு இதுவரை ஒரு சொட்டு காவிரி நீர் சென்று சேரவில்லை.அதாவது வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து வாசன வசதி பெறும் இக் கால்வாய் தூர்வாரி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியும் , தேவையற்ற செடிகள் வளர்ந்தும் நீர் பாய்வதற்கு ஒரு தடையாகவே இருந்து வருகிறது .

இதனால் இப்பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கருக்கும் வயலில்  நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதை நெல்கள் நீரின்றி கருகும் அபாயத்தில்  உள்ளது. இதனால் ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகளே சொந்தமாக வாய்க்கால்-யை வெட்டும் (தூர்வாரும்) அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை விவசாயிகளே தங்களது நிதி பங்களிப்போடு வெட்டும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தெளித்த விதை நெல்லை காப்பாற்ற இதுவரை சுமார் 50 ஆயிரத்துக்கு மேல் செலவாகி உள்ள நிலையில், ஆற்றில் போதிய நீர் வரத்து இல்லாததால் வாய்க்கால் மூலம் தண்ணீர் வயலுக்கு பாயாமல் உள்ளது.

ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். போதிய நீர்வரத்து இல்லையென்றால் தெளிக்கப்பட்ட விதை நெல்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக மட்கி இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்துப் போயி விடுமென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க    | "சிறையில் ராகுல் புத்தகம் எழுத வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.