சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்த மாணவி திடீரென மர்மமான முறையில் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி நெசவாளர் காலணியை சேர்ந்த சிறுமி கோவிலூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் மாணவி கணித தேர்வுக்கான சிறப்பு வகுப்பிற்கு சென்றார். தொடர்ந்து, மாலை வீட்டிற்கு வந்த மாணவி தேநீர் அருந்தினார். அதன் பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரது பெற்றோர் மாணவியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்றக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.