114 கிரவுண்ட் நிலத்தை பட்டா வழங்கிய வழக்கு...அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

114 கிரவுண்ட் நிலத்தை பட்டா வழங்கிய வழக்கு...அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் 534 சதுர அடி நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி 2011-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து ஜூன் 5-ம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஜூன், ஜூலைக்கான தண்ணீரை திறந்து விடக்கோரி கடிதம்...! கர்நாடகா நீர் வழங்குமா?

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்பாளராக இல்லாத நிலையில், விதிகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து இடத்தை எடுத்துள்ளதால், உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டக்கலை சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில் இடத்தை அரசு எடுத்துள்ளதாகவும்,  நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என்றும், பட்டாவை ரத்து செய்து நில நிர்வாக ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.