முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்...
முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர், அதன் தொன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து மதுரை குருவிக்காரன் சாலை பால பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.