மாதவிடாய் காரணமாக 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை...போலீசார் தீவிர விசாரணை
மரக்காணம் அருகே 7ஆம் வகுப்பு மாணவி மாதவிடாய் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கொள்ளுமேடு இருளர் பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த மாணவியை கண்ட அக்கம் பக்கத்தினர் மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் சடலத்தை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த மாணவியின் பெற்றோர்கள் வெளியூரில் தங்கி பணிபுரிவதால் இச்சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மரக்காணம் போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு மாதவிடாய் காரணமாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலி தாங்காமல் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் போலீசார் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.