"குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும்"  இராமதாசு வலியுறுத்தல்!

"குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும்"  இராமதாசு வலியுறுத்தல்!

குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

குவைத் நாட்டில் தூய்மைப் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பணி செய்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரகள் தமிழநாட்டிற்கு திரும்பி வருவதற்கு உதவுமாறு அங்குள்ள  தூதரகத்தில் முறையீடு செய்தும் அவர்களுக்கு தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் குவைத்தில் சிக்கித் தவிக்கும் 20 தமிழர்களை மீட்குமாறு பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்தின் மூலமாக குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணிக்கு சென்றனர். அதற்காக  சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்திற்கு ரூ. 1.05 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். குவைத் நிறுவனத்தில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 (75 குவைத் தினார்) வீதம் இரு ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  ஓராண்டு பணி முடிந்த நிலையில், வேலைவாய்ப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமானால்  ரூ. 1.25 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று குவைத் நிறுவனம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

குவைத்துக்கு வேலைக்கு சென்ற 20 இளைஞர்களும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த ஓராண்டாக பணி செய்து அவர்கள் ஈட்டிய ஊதியத்தைக் கொண்டு, குவைத் செல்வதற்காக வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையுமே கட்ட முடியாத நிலையில், அவர்களால் குவைத் நிறுவனம் கேட்ட பணத்தைத் தர முடியவில்லை. அதனால், அவர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்,  அவர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டது. அவர்களின் உடமைகள் அனைத்தையும் தூக்கி வீசிய நிறுவன அதிகாரிகள், அவர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த இடத்தையும் மூடி  விட்டனர். அதனால், 20 இளைஞர்களும் கடந்த ஒரு மாதமாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவு கிடைக்காமலும் குவைத்தில் வாடுகின்றனர். அவர்களிடம் கடவுச்சீட்டும், பயணச்சீட்டுக்கு பணமும் இல்லாததால், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் குவைத்தில் தவித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். 

குவைத் நிறுவனம் தங்களை ஏமாற்றியது குறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம், தொழிலாளர் நலத்துறை அலுவலகம், காவல்நிலையம் ஆகியவற்றில் 20 தமிழ் இளைஞர்களும் புகார் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவர்களின் கடவுச்சீட்டை ஒப்படைத்து, பயணச்சீட்டு பெற்றுக் கொடுத்து அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அந்த நாட்டு காவல்துறை ஆணையிட்டதை அந்நிறுவனம் நடைமுறைபடுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், காவல்துறையின் ஆணையை குவைத் நிறுவனம் மதிக்காததால், 20 தமிழ் இளைஞர்களின்  துயரம் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ள இராமதாசு, ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவர்கள் தவிப்பதாகவும் கூறியுள்ளார். 

இது குறித்து இந்திய தூதரகத்தில் முறையிட்டும்  எந்த நடவடிக்கையையும் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள இராமதாசு, இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் கடவுச்சீட்டு, ஊதிய நிலுவை ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க || "ஈஷா யோகா மையம் தொடங்க அனுமதி பெறவில்லை" தமிழ்நாடு அரசு தகவல்!