செஸ் ஒலிம்பியாட்: 22 வீரர்கள் சென்னை வருகை..!

செஸ் ஒலிம்பியாட்: 22 வீரர்கள் சென்னை வருகை..!

2022 ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும்  நிலையில், 22 வீரர்கள் சென்னைக்கு வருகை தரவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னையடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, அங்கு நிலவும் போரால் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் முதன்முறையாக நடைபெறவிருக்கிறது. 

போட்டிக்கான எதிர்பார்ப்பு:

இந்தப் போட்டியில் சுமார் 200 நாடுகளிலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொள்கின்றனர். இதனால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. 

செஸ் ஒலிம்பியாட்டை பிரபலபடுத்தும் தமிழக அரசு:

வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை, தமிழக அரசு பல வழிகளில் பிரபல படுத்தி வருகிறது. அந்த வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. “செஸ் தம்பி” என்று பெயரிடப்பட்ட இந்த சின்னம் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அமைந்திருக்கும். இந்த சின்னம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதேபோன்று, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும்  “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை” என்ற பாடலை உருவாக்கி பிரபலப்படுத்தினர். அந்த பாடல் சென்னை மாநகரின் பிரசித்தியான நேப்பியர் பாலத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் சென்னை வருகை:

இப்படி முதன்முறையாக சென்னையில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வரும் நிலையில், செஸ் விளையாட்டில் பங்கேற்க உள்ள வீரர்கள் இன்று முதல் சென்னைக்கு வருகை தர உள்ளனர். அதில் முதற்கட்டமாக 22 வீரர்கள் முதலில்  சென்னைக்கு வருகை தரவுள்ளனர். அதுவும் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகை தரவுள்ளனர். அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.