கடலில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் மாயம்- தேடுதல் பணி தீவிரம்

மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயமாகியுள்ள நிலையில் கடலோரக் காவல் படையினரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் மாயம்- தேடுதல் பணி தீவிரம்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதி அமைந்திருக்கும் பகுதிக்கு பின்புறம் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று முடித்த 6 மாணவர்கள் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.

அப்போது அதில் 3 மாணவர்கள் குளிக்க வேண்டும் எனக்கூறி கடலின் ஆழ்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதமாக ராட்சத அலையில் சிக்கி பல்லாவரத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் (17), ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சவுரிநாதன் (17) மற்றும் தர்மராஜன் (18) ஆகிய 3  பேர் மாயமாகியுள்ளனர்.

இதனையடுத்து உணவு வாங்கி வரச் சென்ற அவர்களுடன் வந்த சாலமன், சக்திவேல் மற்றும் ஆகாஷ் ஆகிய 3 மாணவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் கடலோர காவல் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காணாமல் போன 3 மாணவர்களை  ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும்  மாணவர்கள் 3 பேரும் மாயமாகி இரண்டரை மணி நேரத்திற்கு மேலானதால் மாணவர்களை உயிருடன் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அலையில் சிக்கி மாயமான மாணவர்கள் மூவரும் உயிருடன் மீட்கப்படுவார்களா என்ற ஆவலில் அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு எதிர்பார்ப்புடன் காத்து நிற்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக உடன் வந்த மீதமுள்ள 3 பேரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிகமாக இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும், இதுவரை உயிருடன் யாரும் மீட்கப்பட்டதில்லை எனவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.