தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம்...அமைச்சர் சொன்ன பதில்!

தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம்...அமைச்சர் சொன்ன பதில்!

இலவசப் பயண நகரப் பேருந்துகளில் நாள்தோறும் 40 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கேள்வி எழுப்பிய விஜயபாஸ்கர் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் இன்று கூடியது. தொடர்ந்து வினாக்கள் விடைகள் நேரத்தில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் கேள்வியெழுப்பினார்.

பதிலளித்த சிவசங்கர் :

அதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி 32 கிலோ மீட்டர் என்றும், அதற்கு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்பதால் 5-10 நிமிடத்திற்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, மூன்று நகர பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும், கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிக்க : விரைவில் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கப்படும் - அமைச்சர் பதில்!

மேலும், திமுக அரசு பொறுப்பேற்றப்பின், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.