"பழங்குடி சாதி சான்றிதழ் கேட்டப் பெண்ணை அலைய விட்ட கோட்டாட்சியருக்கு 50 ஆயிரம் அபராதம்" உயர் நீதிமன்றம் அதிரடி!

"பழங்குடி சாதி சான்றிதழ் கேட்டப் பெண்ணை அலைய விட்ட கோட்டாட்சியருக்கு 50 ஆயிரம் அபராதம்" உயர் நீதிமன்றம் அதிரடி!

காட்டுநாயக்கர்  பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த வருவாய் கோட்டாச்சியர் (RDO) அலுவலரின் உத்தரவை ரத்து செய்தும் கோட்டாட்சியருக்கு 50ஆயிரம் அபராதம் விதித்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரை சேர்ந்த ஸ்ரேயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்" தான் கரூர் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும் கரூர் மாவட்டத்திலேயே பள்ளி படிப்பை பயின்றதாகவும், தான் காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். எனவே தனக்கு காட்டு நாயகர் சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, எனது பள்ளி ஆவணங்கள், எனது தந்தையின் பள்ளி ஆவணங்கள், எனது தந்தை வழி உறவினருக்கு காட்டுநாயகர் சமூகத்தைச் சேர்ந்தவர் என வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை இணைத்து எனக்கு காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.  எனது மனுவை RDO நிராகரித்து விட்டனர். எனவே வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு காட்டுநாயக்க பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது‌. 

அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது, "1977 ஆண்டு அரசு அறிவிப்பின்படி ஒருவர் நிரந்தர வசிப்பிடத்திலிருந்து சான்றிதழ்களை விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறது. இதில் நிரந்தர வசிப்பிடம் என்பது அவர்கள் நிரந்தரமாக தங்கி இருக்கும் இடத்தை குறிக்கிறது. மாறாக அவர்களின் பூர்வீக இடத்தினை குறிக்கவில்லை. எனவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் பெற்றோர் மற்றும் தாத்தா நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். எனினும் பல ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வருகிறது. எனவே ஜாதி சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை ரத்து செய்த வருவாய்துறை அலுவலர் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது. 

மனுதாரருக்கு காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மனுதாரரின் விண்ணப்பத்தை மனுதாரர் பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் வருவாய்த்துறை அலுவலர் பரிசீலனை செய்து  நான்கு வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும்  வருவாய் கோட்டாச்சியர் உரிய புரிதல் இல்லாமல் மனுதாரரை தேவையில்லாமல் இந்த நீதிமன்றத்தில் அலைய விட்டுள்ளார்.  எனவே மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.  இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தனர்.

இதையும் படிக்க:"தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" தமிழிசை நழுவல்!