சட்டவிரோதமாக தப்பிய 64 இலங்கை அகதிகள்.... இண்டர்போல் உதவியை நாடியது தமிழக காவல்துறை...

தமிழக அகதிகள் முகாமில் இருந்து 64 இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக தப்பியுள்ளதால், தமிழக காவல்துறை இண்டர்போலிடம் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டவிரோதமாக தப்பிய 64 இலங்கை அகதிகள்.... இண்டர்போல் உதவியை நாடியது தமிழக காவல்துறை...

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற உச்சக்கட்ட போரின் போது ஏராளமான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கை நாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்காக தமிழகத்தில் 109 அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இந்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள  109 முகாம்களில் 65 ஆயிரம் அகதிகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தென் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள் சுமார் 64 பேர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த படகின் மூலமாக இலங்கை கடற்பரப்பிற்குச் சென்று அங்கு மேலும் 20 இலங்கை தமிழர்களை படகில் ஏற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

மொத்தம் 84 அகதிகள் இலங்கை கடற்பரப்பில் இருந்து மாலத்தீவு வழியாக தென்னாப்பிரிக்கா சென்று இறுதியாக கனடா சென்று தஞ்சம் புகுவதுதான் அவர்களுடைய திட்டமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவர்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக சிக்கிக் கொண்டதா கூறப்படும் நிலையில், இது குறித்து எந்த முறையான தகவலோ அல்லது இவர்களை கைது செய்ததாகவோ மாலத்தீவு தரப்பில் இருந்து தெளிவாக பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மாலத்தீவு அருகே உள்ள டிக்கோ கார்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. 

எனவே அமெரிக்காவின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த தீவில் அத்துமீறி இவர்கள் படகு நுழைந்ததாக கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அமெரிக்க தரப்பில் இருந்தோ அல்லது இந்திய தூதரகத்துக்கோ இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை இந்த 64 பேர் யார் என்பதை உளவுத்துறை போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக்கொண்டதாக கூறப்படும் 84 நபர்களின் விவரங்களை பெறுவதற்காக தமிழக காவல்துறை இன்டர்போல் உதவியை நாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.