புதுக்கோட்டையில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

தீப்பிடித்து எரிந்த பேருந்து : 2 பேர் உடல் கருகி பலி..!

புதுக்கோட்டையில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது, இருவர் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பாம்பாற்று பாலத்தின் பகுதியில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைக்குடியிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த பேருந்தும், திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்த  இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதில் பேருந்து முழுவதும் தீ பரவியது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சாதூர்யமாக செயல்பட்டு  பயணிகள் 20 பேரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கினர்.

அதேசமயம்  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமயம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும்  பேருந்தும், இருசக்கர வாகனமும் முழுவதுமாக தீயில் கருகின. உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் திருமயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.