மழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை, மகள் பலி..! பலத்த காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதி!!

தென்காசி அருகே மழையால் வீடு இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை ,மகள் உயிரிழப்பு - பலத்த காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதி .  

மழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை, மகள் பலி..! பலத்த காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதி!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கல்யாணசுந்தரம்  விவசாயி. இவர் மனைவி வேலம்மாள், மற்றும் இளைய மகள் ரேவதி  ஆகியோருடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  மாலையில் இருந்தே அப்பகுதியில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அதன் அழுத்தத்தை தாங்க முடியாத கல்யாண சுந்தரத்தின் வீடு நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கல்யாணசுந்தரம், வேலம்மாள், மகள் ரேவதி ஆகியோர் மீது பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது.  வீடு விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாட்டில் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மகள் ரேவதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய் வேலம்மாள் மட்டும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்ததால் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இந்த சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வீடு இடிந்து விழுந்து தந்தை, மகள் பலியான சம்பவம் வாகைகுளம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.