கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்....!

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்....!

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட நடவடிக்கை எடுப்பார்கள் என மாண்புமிகு தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளதை மறுமலர்ச்சி திமுக சார்பில் வரவேற்கின்றேன் என வைகோ கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் தொழில் நகரான கோவில்பட்டி, மாவட்ட  தலைமையிடத்திற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது எனவும் கோவில்பட்டி மாவட்டம் வேண்டும் என்பது பொதுமக்களும், பல அரசியல் கட்சிகளும், மறுமலர்ச்சி திமுகவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டப் பிரிவினையின் போது, கோவில்பட்டிக்கு மிக அருகாமையில் அமையப் பெற்றுள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதி முழுவதையும்  பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க, புதிதாக உருவாக உள்ள கோவில்பட்டி மாவட்டத்தில் இணைத்திட வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இவை தவிர, கோவில்பட்டி நகரத்துக்கு நேரடித் தொடர்புகளில் உள்ள தென்காசி விருதுநகர், நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதி மக்களின் கருத்துகளையும் கேட்டு இணைத்திட முன்வரவேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல், மக்கள் எளிதாக அணுகுவதற்கு வாய்ப்பாக புதிய மாவட்டங்களை உருவாக்கிட முன்வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மறுமலர்ச்சி திமுக சார்பில்  தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி... இஸ்ரோ சாதனை!!