"பாஜக கூட்டணியுடன் இருக்கும் வரை அதிமுகவிற்கு பின்னடைவுதான்"  திருமா கருத்து!

"பாஜக கூட்டணியுடன் இருக்கும் வரை அதிமுகவிற்கு பின்னடைவுதான்"  திருமா கருத்து!

அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இருக்கும் வரை எத்தனை மாநாடு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும் அதிமுகவுக்கு பின்னடைவை தான் தரும் என திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட அலுவலகத்தை விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குத்து விளக்கு ஏற்றிவைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது அவரின் அகந்தை போக்கை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது, ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிகவும் கொச்சைபடுத்துகின்றார். ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுவது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திட முடியும் என ஆளுநர் கருதுவது வேடிக்கையாக இருக்கின்றது. 

இந்திய பிரதமரும், ஒன்றிய அரசும் தமிழக ஆளுநரின் போக்கை வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல, தமிழக ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தொடர்ந்து அவமதிப்பதும், அலச்சியப்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாடு மக்களின் உனர்வுகளை இது காயபடுத்துவதாக உள்ளது" என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை மறு உறுதி செய்திட இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாடு மக்கள் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திடவில்லை. தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. அதிமுக மதுரை மாநாட்டில் நடைபெற்ற கூத்து பொதுமக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அதிமுக - பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி உறவில் இருக்கும் வரையிலும், அதிமுக எத்தனை மாநாட்டு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும் அதன் பின்னடைவாக தான் போய் முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:மேட்டூர் எம்.எல்.ஏ மீது மருமகள் வரதட்சணை புகார்!