"NLC விரிவாக்கப் பணிகளைத் தொடர்ந்தால், கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும்" அன்புமணி எச்சரிக்கை!!

"NLC விரிவாக்கப் பணிகளைத் தொடர்ந்தால், கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும்" அன்புமணி எச்சரிக்கை!!

மீண்டும் என். எல்.சி நிறுவனம் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கினால் பாமக சார்பில் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.

கடலூர் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என். எல்.சி நிறுவனம் 2-ம் சுரங்கப்பாதை விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பாமகவினர் 2-வது முறையாக என். எல்.சி நிர்வாகத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுரங்கப்பாதை விரிவாக்கப் பணி தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவல்துறையை ஏவி நிலத்தைக் கையகப்படுத்தும் என். எல்.சி நிர்வாகத்தைக் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் மண்ணையும் மக்களையும் என். எல்.சி நிர்வாகம் அழித்துக் கொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விட பல மடங்கு ஆபத்தானது நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியான 36 ஆயிரம் மெகா வாட்டில், ஒரு நாளைக்கு 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தேவை. இந்நிலையில், மின் மிகை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் வெறும் 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி என். எல்.சி தேவையா, என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விவசாயிகளை வஞ்சித்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் என். எல்.சி நிறுவனம் பணிகளை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்தால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாமக சார்பில் சாலை மறியல் நடத்தப்படும் என்று எச்சரித்த அன்புமணி, மாவட்டமே ஸ்தம்பிக்கும் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க || எலான் மஸ்கின் X.com-ற்கு தடை... சிக்கலில் X.com??