பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல்...

பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல்...

சென்னையில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் விளையாட்டு பயிற்சி மையத்தை நடத்தி வரும் நாகராஜன் மீது, அவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தடகள பயிற்சியாளர் நாகராஜனை நேற்று கைது செய்தனர். இதனிடையே, தங்களிடமும் நாகராஜன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மேலும் 3 வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட நாகராஜன், இரவு 10 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போதுமான ஆவணங்களை போலீசார் சமர்ப்பிக்கவில்லை என கூறி, நாகராஜனை சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார். இந்நிலையில், 2-வது நாளாக நீதிபதி முன் தடகள பயிற்சியாளர் நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜூன் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்படும் தடகள பயிற்சியாளரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.