மணல் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல்!  திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு!!

மணல் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல்!  திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு!!

துறையூர் அருகே மணல் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் துறை அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இவர் துறையூர் உட்பட பதினாறு கிராமங்களுக்கு வருவாய் ஆய்வாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் வனஜா அப்பகுதியின் வருவாய் ஆய்வாளரான பிரபாகனுக்கு தகவல் அளித்துள்ளார். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் பச்சமலை அடிவாரத்தில் உள்ள  புறம்போக்கு இடத்தில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண் அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளார். இதனை உடனடியாகத் தடுத்த பிரபாகரன் ஜேசிபி எந்திரத்தின் சாவியை எடுத்துக் கொண்டு திரும்புகையில் , திமுகவைச் சேர்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்வரன், ஜேசிபி உரிமையாளரான தனபால் மற்றும் மணி ஆகிய 3 பேரும் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும், சாலையில் கிடந்த கருங்கல்லை எடுத்து பிரபாகரனின் தலை, கை, கால் உள்ளிட்டவற்றில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மணி என்பவர் பிரபாகரனின் கழுத்தின் பின்புறம் மிகவும் கொடூரமாக  கடித்துள்ளார். இத்தகைய கொடூரத் தாக்குதலில் நிலை குலைந்து போன பிரபாகரனை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இது பற்றி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் தனபால் அவரது நண்பர் மணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரும்  தலைமறைவாகியுள்ளதால் அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!