பாஜகவினர் கார் மீது முட்டை வீச்சு..! தாம்பரத்தில் பரபரப்பு...!!

பாஜகவினர் கார் மீது முட்டை வீச்சு..! தாம்பரத்தில் பரபரப்பு...!!

அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கிற்கு வந்த பாஜகவினர் கார் மீது முட்டை வீசப்பட்டதால் தாம்பரம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பக்தவச்சலம்.
இவர்  தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

கருத்தரங்கம் முடிந்த பின்னர் வெளியே சென்று அவரது காரை பார்த்தபோது கார் முழுவதும் முட்டை மற்றும் தக்காளிகள் வீசப்பட்டு கார் சேதப்படுத்தியபடி இருந்தது. இதை தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஒன்று திரண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பாஜகவினர் சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியனிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட துணை ஆணையர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து இச்சம்பவத்தில் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.