என்.ஐ.ஏ வழக்கு; வழக்குரைஞர் முகமது அப்பாசுக்கு ஜாமீன்!

என்.ஐ.ஏ வழக்கு; வழக்குரைஞர் முகமது அப்பாசுக்கு ஜாமீன்!

என். ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்  நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு மதுரையை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர் வழக்காடி வந்தார். இந்நிலையில் வழக்குரைஞர் முகமது அப்பாஸையும் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணை நடைபெற்றது.  அப்போது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக அப்பாசை கைது செய்துள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.விவேகானந்தன் வாதிட்டார்.

மேலும், அவரிடமிருந்து பென் டிரைவ் கைப்பற்றியதாக என். ஐ.ஏ. அதிகாரிகள் குற்றம் சாட்டுவதாகவும், பென் டிரைவ் வைத்திருப்பது குற்றமாகாது எனவும்,  அதில் ஆதாரங்கள் உள்ளதா என கண்டறிய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஆயுத பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளதாக வாதிட்டார்.

என். ஐ.ஏ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என். ஐ.ஏ. எச்சரிக்கையுடன் செயல்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதே முகமது அப்பாசுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்த  போதும், கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து தற்போது வழக்கில் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பேஸ்புக் பதிவுக்காக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்த அவர், கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ஆடியோ சிக்கியுள்ளதாகவும், தொலைப்பேசியை ஒட்டுக் கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப்ப்படையிலும் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை சட்டவிரோதம் என கூற முடியாது எனவும், இந்த வழக்கு தொடர்பாக கேஸ் டைரியை நீதிமன்றம் ஆராயலாம் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது அப்பாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டனர். இருப்பினும் அவருக்கு நிபந்தனைகளையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:தக்காளியுடன் மாயமான லாரி கண்டுபிடிப்பு!