கொடுக்கல் வாங்கல் நடந்தால்தான் வங்கிகள் லாபகரமாக இயங்கும்...! - அமைச்சர் பெரிய கருப்பன்

கொடுக்கல்  வாங்கல் நடந்தால்தான் வங்கிகள் லாபகரமாக இயங்கும்...! -  அமைச்சர் பெரிய கருப்பன்

"மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க அனுமதி கேட்டுள்ளோம் : அதற்கென கூட்டுறவுத்துறை வங்கிகள் , நியாய விலைக்கடைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்"  என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை சார்பில்  44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவற்றை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இதன் பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 

மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட 44 அறிவிப்புகளையும் செயல்படுத்தும் முயற்சிகள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது என்றும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உள்ள வைப்பு நிதியானது,  71,955. 59 கோடியாக உள்ளது. அதோடு,  64,140 கோடியளவு கடன் வழங்கப்படுகிறது. அதாவது, வைப்பு நிதிக்கு இணையாக கடனும் வழங்கப்படுகிறது  என்றும் குறிப்பிட்டார்.  

மேலும்  அவர், " தமிழகத்தில் 34 ஆயிரத்துக்ஙும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் இருப்பதாகவும், மேலும் 33,300 கடைகள் கூட்டுறவு துறை சார்பில் இயங்குகிறது என்றும்,  அதோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி , தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் , தலைமை கூட்டுறவு வங்கிகள் மூலம் கூட்டுறவுத்துறை சார்பில் வங்கிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.  தொடர்ந்து, வங்கி சேவைகளில் நவீன முறைகளை கையாள உள்ளதாகவும்,  தனியார் , பொதுத்துறை வங்கிகளுடன் போட்டியிடும் வகையில்  தரம் மிக்க , விரைந்து செயல்படும் வகையிலான கூட்டுறவு வங்கிகளுக்கான தகவல்  தொழில்நுட்பங்களை மேம்படுத்த உள்ளதாகவும் கூறினார். 

அதையடுத்து, இந்த ஆண்டு 14, 000 கோடியளவிற்கு  பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,  இலக்கைக்காட்டிலும் கூடுதலாக பயிர்க்கடன் வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், மகளிர் , மாற்றுத்திறனாளிகள் , கணவனை இழந்த பெண்கள் மற்றும் நடைபாதை வணிகர்களுக்கு கடன்களை குறைந்த வட்டியில் வழங்குவதாகவும் மேலும், ஆதிதிராவிட , பழங்குடியினருக்கும் கூடுதலாக கடன்களை வழங்க உள்ளதாகவும் கூறினார்.  

அதையடுத்து, பெருநிறுவனங்களுக்கு கடன் வழங்குவது , அவர்களின் சேமிப்பை ஊக்குவிப்பது என்பதை தாண்டி , மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க கூட்டுறவுத்துறை சார்பில் எதிர்காலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.  அதோடு, கூட்டுறவுத்துறையில் கட்டுநர் , விற்பனையாளர் என இருபிரிவாக 6500 காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் துறையாக கூட்டுறவுத்துறை உள்ளது எனவும் கூறினார். 

மேலும், மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி கூட்டுறவுத் துறையின் பணி அல்ல என்றும் , அதன் மூலம் எத்தனை நபர்கள் பயனடைவர் என்பது குறித்து தோராயமாக எண்ணிக்கையை முதல்வர் வெளியிட்டுள்ளதாகவும், எந்த அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை யை வழங்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர்தான்  முடிவு செய்வார் என்றும் கூறினார்.  

இதையும் படிக்க   }  ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு ஏற்பு...கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈபிஎஸ் கடிதம்!

அதோடு, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் பணியை கூட்டுறவுத்துறை மூலம் நாங்களே செய்கிறோம் என கேட்டுள்ளோம் என்றும்,  அதற்காகத்தான் கூட்டுறவு வங்கிகளை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  கூட்டுறவுத் துறையில் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணி நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார். 

மேலும், கூட்டுறவுத் துறை மூலம் 3.18 லட்சம் நபர்கள் விவசாயம் சாராத பணிகளுக்கான  பண்ணை சாரா கடன் பெற்றுள்ளதாகவும், அவர்களில் 20 சதவீதம் நபர்கள் கடனை செலுத்தாமல் உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து அபராத வட்டியை கழித்து கொண்டு மீத தொகையை வசூலிப்பதற்கான சமாதான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு,  இதன் மூலம் 1300 கோடிக்கு மேல் கூட்டுறவு வங்கிகளுக்கு வருவாய் வருவதற்கான சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறினார். 

தொடர்ந்து, கடன் பெற்றோரின் சொத்து பத்திரங்கள் வங்கிகளின் கையில் இருந்தாலும் , கொடுக்கல்  வாங்கல் நடந்தால்தான் வங்கிகள் லாபகரமாக இயங்கும் என்றார். 

மேலும், "வேடசந்தூரில் 15 குடும்ப அட்டைகளை எடுத்து சென்று ஒருவர் நியாய விலைக்கடையில் பொருள்களை கேட்டுள்ளார். அருகில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில்  அவர் பல குடும்ப அட்டைகளை தன்னுடன் எடுத்து சென்றிருக்கலாம். என்றாலும் அவருக்கு நியாய விலை கடையின் ஊழியர் பொருட்களை தரவில்லை என்பது பாராட்டக்கூடிய விசயம். எனவே இந்த விசயத்தில் உண்மை தன்மையை அறிந்து எந்த நோக்கத்தில் எடுத்து சென்றார் என விசாரித்து உண்மைத்தன்மை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்..." 
என்று கூறினார்.
 
 இதையும் படிக்க   }  மசோதா நிறைவேற்றிய கையோடு ...! வெளிநாடு செல்லும் தொழில்துறை அமைச்சர்...!!