கரையை கடந்த பிபார்ஜாய் புயல்...! உருக்குலைந்த மாநிலம்....!
தென்கிழக்கு அரபிக்கடலில் வலுப்பெற்ற பிபார்ஜாய் புயல் நேற்று மாலை குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதனால், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதையடுத்து, பிபோர்ஜாய் கரையை கடந்த நிலையில், மின்கம்பங்கள், மரங்கள் வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன. புயல் கரையை கடந்த வீசிய சூறைக்காற்றால் குஜராத்தில் பல மாவட்டங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன.
இதனால், மாண்ட்வி, மோர்பி, துவாரகா, மாலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், 300க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தும், பெட்ரோல் பங்குகளின் மேற்கூரைகள், வீடுகள் உள்ளிட்டவை கடும் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக பல கிராம மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது அவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் கரையை கடந்த நிலையிலும், கடலில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருகின்றன.
எனவே, மக்கள் அனைவரும் சீற்றம் குறையும் வரை கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாமென அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக கடலோர காவல் படையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | கரையை கடந்தது,.. 'பிபார்ஜாய்' புயல்...!