விநாயகரை கரைக்க போய் விபரீதம்... கால்வாயில் தவறி விழுந்து இறந்த சிறுவர்கள்...

விளையாட்டாய் குட்டி விநாயகர் சிலை கரைப்பதற்கு சென்ற மாணவர்கள் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விநாயகரை கரைக்க போய் விபரீதம்... கால்வாயில் தவறி விழுந்து இறந்த சிறுவர்கள்...

திருவள்ளூர் அடுத்த செவ்வாபேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஷ்யாம் விக்னேஷ் (13). இவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.  அதே பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் மோனிஷ் (12). இவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் நேற்று மாலை விநாயகர் சிலை கரைப்பதற்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்னாநதிநீர்  இணைப்பு கால்வாய் அருகே சென்றுள்ளனர்.

விளையாட்டாய்  விநாயகர் சிலையை தூக்கி கால்வாயில் வீசுவதற்கு பதிலாக கால்வாயில் கரைப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த இருவரும் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டனர். இதைக்கண்ட  அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் அடித்துச் செல்வதை பார்த்த அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் சிறுவர்களை தேடினர். ஆனால்2 மாணவர்களும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மாணவர்களையும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகியும் கிடைக்காததால் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பின் சிறுகடல் பகுதியில் இன்று காலை  மாணவர்களின் ‌ உடல்களை சடலமாக மீட்டனர். 

இதையடுத்து  செவ்வாப்பேட்டை போலீசார்  இரண்டு மாணவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு செல்லும் கால்வாயில் குளிக்க துணி துவைக்கவோ செல்பி எடுக்கவோ குழந்தைகளுடன் யாரும் போகக் கூடாது என மாவட்ட நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் கிருஷ்ணா கால்வாயில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விளையாட்டாய் நேற்று  மாலை   விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க சென்ற 2 மாணவர்கள் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.