பைக் மீது மோதிய அரசு பேருந்து - மனைவி கண்முன்னே கணவர் பரிதாப பலி

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், மனைவி மற்றும் மகள் கண் முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக் மீது மோதிய அரசு பேருந்து - மனைவி கண்முன்னே கணவர் பரிதாப பலி

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் டிரைவராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். இதற்கிடையில் இவர் இன்று காலை தனது மனைவி பிரம்மகுமாரி மற்றும் மகள் அஸ்வதி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பாலகோடு பகுதியில் இருந்து தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் புலியூர்குறிச்சி அருகே வந்தபோது, களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் நோக்கி  வந்த அரசு பேருந்து சுரேந்திரனின் இரு சக்கர வாகனத்தின் பின்பக்கமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டநிலையில் சாலையில் விழுந்த சுரேந்திரன் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி  பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுரேந்திரன் உடலை கைப்பற்றியதோடு, லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவரது மனைவி மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.