டிப்பர் லாரியில் கார் மோதி விபத்து... ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்...

மணப்பாறை அருகே டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.

டிப்பர் லாரியில் கார் மோதி விபத்து... ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்...

மதுரையைச் சேர்ந்த எட்டுபேர் லெப்பைக்குடிக்காடு தர்காவிற்கு இன்று காரில் சென்று கொண்டிருந்தனர் காரை முகமதுஉமர் (34) என்பவர் ஓட்டிச் சென்றார்.  திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டி விளக்கு என்ற இடத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி இன்டிகேட்டர் போடாமல் திடீரென பிரேக் போட்டு லாரியை வலதுபுறம் திருப்பமுயன்றதால் பின்னால் வந்த கார் லாரியின் பின்புறம் மோதி லாரியினுள் சிக்கிக்கொண்டது.

இதில் காரின் முன்புறம் நசுங்கியதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட கார் ஓட்டுனர் முகமதுஉமர் (34), ஜாகீர் உசேன் (49), சையது அம்ஜத்கான் (37), சுல்தான் (29),  காமில் பாட்ஷா (51), மன்சூர் அகமது (40), ஜெயினுலாப்தீன் (34), ஷாகுல்அமீது (42) ஆகிய எட்டு பேரும் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறையின் வாகனத்தின் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் காமில்பாட்ஷா உயிரிழந்தார். மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.